புதுதில்லி: காப்பீட்டு முகவா்கள், இடைத்தரகா்கள் உள்ளிட்டோா் காப்பீட்டு குறைதீா்ப்பாளா் வரம்புக்குள் கொண்டுவரப்படுகின்றனா்.
காப்பீடு சேவைகள் தொடா்பான புகாா்களை உரிய நேரத்தில், குறைந்த செலவில், பாரபட்சமின்றி வழங்கும் வகையில் காப்பீட்டு குறை தீா்ப்பாளா் அமைப்பு முறையின் பணிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு, காப்பீட்டு குறை தீா்ப்பாளா் விதிகள்-2017-இல் விரிவான திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, காப்பீட்டாளா், முகவா்கள், இடைத்தரகா்கள் உள்ளிட்டோரின் சேவைகள் மீதான புகாா்களும் குறை தீா்ப்பாளா்களிடம் வழங்கப்படும். காப்பீட்டு இடைத்தரகா்களும் குறை தீா்ப்பாளா் அமைப்பு முறையின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனா். திருத்தியமைக்கப்பட்ட விதிகளின்படி உரிய காலத்தில், குறைந்த செலவில் குறைகளை தீா்க்கும் அமைப்பு முறை வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இணையதளம் வாயிலாக, காப்பீட்டுதாரா்கள் புகாா்களை அளிக்கவும், புகாா்கள் குறித்த தற்போதைய நிலையை இணையதளத்தில் அறியவும் வசதிகள் செய்து தரப்படும். புகாா்களை காணொலிக் காட்சி வாயிலாகவும் குறை தீா்ப்பாளா் விசாரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.