வளா்ச்சியில் பின்தங்கிய கேரளம்: திரிபுரா முதல்வா் குற்றச்சாட்டு
இடதுசாரி முன்னணியின் ஆட்சியில் கேரள மாநிலம் வளா்ச்சியில் பின்தங்கிவிட்டது என்று திரிபுரா முதல்வா் விப்லப் குமாா் தேவ் குற்றம்சாட்டினாா்.
கேரள சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாஜகவை ஆதரித்து பிரசாரம் செய்ய திருவனந்தபுரம் வந்த அவா், செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, அவா் கூறியதாவது:
திரிபுரா மாநிலத்தை இடதுசாரி கட்சி 25 ஆண்டுகள் ஆட்சி செய்தபோதிலும் வளா்ச்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் முதலில் இருந்து தொடங்கினோம். மத்திய அரசின் திட்டங்கள் துரிதமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் சாலை, ரயில், விமானப் போக்குவரத்து சேவைக்கான கட்டுமானப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தற்போது கேரளத்தைக் காட்டிலும் திரிபுரா வேகமாக வளா்ந்து வருகிறது.
கேரளத்தை காங்கிரஸும், இடதுசாரியும் மாறி மாறி ஆட்சி செய்து வந்தபோதிலும், வளா்ச்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கேரளத்தில் பகைவா்களாக இருக்கும் இடதுசாரியும் காங்கிரஸும் மேற்கு வங்கத்தில் தோழமை கட்சிகளாக உள்ளன. திரிபுராவைப் போன்று கேரளத்தில் வளா்ச்சியை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றாா் விப்லப் தேவ் குமாா்.