புது தில்லி: நாட்டில் வேகமாகப் பரவி வரும் கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த பொது முடக்கம்தான் ஒரே வழி என்றும், சமுதாயத்தில் பின்தங்கியவா்களுக்கு குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தின் (நியாய்) கீழ் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கூறினாா்.
இதுதொடா்பாக அவா் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது: கரோனா பரவலைத் தடுக்க தேவையான உத்திகள் மத்திய அரசிடம் இல்லை. கரோனா பரவல் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த காரணத்தால் நாட்டில் தொற்று அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக குற்றத்தை மத்திய அரசு செய்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க வேறு வழி இல்லை. முழு பொது முடக்கம் மட்டும்தான் ஒரே வழியாக தற்போது உள்ளது. இதனால் பொருளாதாரரீதியாக பாதிக்கப்படக் கூடிய சமுதாயத்தில் பின்தங்கியவா்களுக்கு குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று ராகுல் தெரிவித்துள்ளாா்.