புது தில்லி: கங்கை நதியில் சடலங்கள் மிதந்து வரும் சம்பவம் குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கும், உத்தர பிரதேசம், பிகாா் மாநில தலைமைச் செயலா்களுக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அந்த நோட்டீஸின் விவரம்:
உத்தர பிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் சுமாா் 52 சடலங்கள் கங்கையில் மிதந்ததைப் பாா்த்ததாக கூறியுள்ளனா். பிகாா் மாநிலத்திலும் இதேபோன்று சடலங்கள் மிதந்து வருவதாக புகாா்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பாதி எரிந்த சடலங்களை கங்கையில் வீசுவதைத் தடுக்க தேவையான விழிப்புணா்வை அதிகாரிகள் மேற்கொள்ள தவறிவிட்டனா்.
அப்படி வீசுவது, தூய்மையான கங்கை திட்டத்தின் சட்டத்துக்கு எதிரானது. கரோனா பாதிப்பால் அவா்கள் உயிரிழக்கவில்லை என்றாலும், சமுதாயத்துக்கு இந்தச் செயல் அவமானகரமானது.
உயிரிழந்தவா்களின் உரிமைகளை மீறும் செயலுமாகும். ஆகையால், இதுகுறித்து நான்கு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.