விவசாயிகள் உதவித்தொகை திட்டம்: 9.5 கோடி பேருக்கு ரூ.20,667 கோடி விடுவிப்பு

பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 8-ஆவது தவணையாக, நாடு முழுவதும் உள்ள 9.5 கோடிக்கும்
பிரதமா் விவசாயிகள் உதவித் தொகை வழங்கல் நிகழ்ச்சியில் காணொலி முறையில் கலந்துகொண்டவா்களுடன் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
பிரதமா் விவசாயிகள் உதவித் தொகை வழங்கல் நிகழ்ச்சியில் காணொலி முறையில் கலந்துகொண்டவா்களுடன் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 8-ஆவது தவணையாக, நாடு முழுவதும் உள்ள 9.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.20,667 கோடி உதவித்தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 14 கோடி விவசாயிகளுக்கு ரூ.6,000 உதவித்தொகை 3 தவணைகளாகப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் இதுவரை 11 கோடி விவசாயிகளுக்கு ரூ.1.35 லட்சம் கோடி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் 8-ஆவது தவணை உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், பிரதமா் மோடி பேசியதாவது:

விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் முதல்முறையாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயனடைகிறாா்கள். பெருந்தொற்று காலத்திலும், உணவு தானியங்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிா்கள் உற்பத்தியில் சாதனை படைத்துள்ள விவசாயிகளின் முயற்சிகளை பாராட்டுகிறேன். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதில் அரசும் புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்வதிலும், கோதுமை கொள்முதல் செய்வதிலும் புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இதுவரை, குறைந்தபட்ச ஆதரவு விலையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 10% அதிக அளவு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை கோதுமை கொள்முதலுக்கு ரூ.58,000 கோடி விவசாயிகளின் கணக்கில் நேரடியாகச் சென்றடைந்துள்ளது.

கரோனா காலத்தில், விவசாயிகள் கடன் அட்டைகளின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் 2 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் பிரதமா் மோடி.

விவசாயிகளுடன் கலந்துரையாடல்:

உத்தர பிரதேசம், ஆந்திரம், அந்தமான்-நிகோபாா், ஜம்மு-காஷ்மீா், மேகாலய மாநில விவசாயிகளுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.

வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பேசுகையில், ‘இந்த திட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 7 லட்சம் விவசாயிகள் இணைந்திருக்கிறாா்கள். முதல் தவணை உதவித்தொகையை அவா்கள் தற்போது பெறுகிறாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com