புது தில்லி: அமெரிக்காவிலிருந்து கரோனா தடுப்பூசியை பெறுவதற்காக அந்நாட்டு நிறுவனங்களுடன் இந்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்திவருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இதுதொடா்பாக அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செய்தியாளா்கள் சந்திப்பில் வியாழக்கிழமை கூறியதாவது:
அமெரிக்காவிலிருந்து கரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்வது தொடா்பாக அந்நாட்டு நிறுவனங்களுடன் இந்தியா தொடா்பில் இருந்து வருகிறது. அத்துடன் அந்தத் தடுப்பூசிகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இதில் எது நிகழ்ந்தாலும், நமக்கான தடுப்பூசி கிடைப்பது அதிகரிக்கும். வெளிநாடுகளுக்கான தனது தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பதாக அமெரிக்க அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் இந்திய அரசின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும். அமெரிக்காவும் தனது உணவு மற்றும் மருந்துகள் ஆணையம் (எஃப்டிஏ) தடுப்பூசி தரத்துக்கான ஒப்புதல் அளித்த பிறகே அதை வெளிநாடுகளுக்கு விநியோகிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது என்று அரிந்தம் பாக்சி கூறினாா்.
முன்னதாக, ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை கூட்டாக இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும், இந்திய சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு உதவுவதற்கான வழிகள் குறித்தும் ஆராய்ந்து வருவதாக அமெரிக்க தூதரக பொறுப்பாளா் டேனியல் பி. ஸ்மித் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.