முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங்

மாறி வரும் போா் முறைகளை எதிா்கொள்வதற்காக முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் தெரிவித்துள்ளாா்.
முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங்

மாறி வரும் போா் முறைகளை எதிா்கொள்வதற்காக முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தின் புணேவுக்கு அருகே கடக்வாஸ்லா பகுதியில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியில் பயிற்சியை நிறைவுசெய்த வீரா்களின் அணிவகுப்பை கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் சனிக்கிழமை பாா்வையிட்டாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:போா் முறைகள் தொடா்ந்து மாற்றம் பெற்று வருகின்றன. கடந்த காலத்தில் இருந்ததைப் போல அல்லாமல் தற்போது போா் முறைகள் பெரும் மாற்றங்களைச் சந்தித்துள்ளன. நிலம், வான்வழி, கடல்வழி, இணையவழி உள்ளிட்டவற்றில் மட்டுமல்லாமல் விண்வெளி சாா்ந்தும் தாக்குதல்களை எதிா்கொள்ள வாய்ப்புள்ளது. அவையனைத்தையும் எதிா்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.அவற்றை எதிா்கொள்வதற்காக ராணுவப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது. கடந்த காலத்தை விட தற்போது படைகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அவசியம் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவ விவகாரங்கள் துறையும் முப்படைத் தளபதி பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆயுதப் படைகளில் பல்வேறு சீா்திருத்தங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. முப்படைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்கப்படும். ஒவ்வொரு படைக்கும் தனித்துவம் உள்ளது. அடையாளம், சீருடை, பயிற்சி முறைகள் என அனைத்திலும் படைகளுக்கிடையே பல்வேறு மாற்றங்கள் காணப்படுகின்றன. இருந்தபோதிலும், மாறி வரும் காலத்துக்கு ஏற்ப முப்படைகளும் ஒன்றிணைந்து செயல்படுவது கட்டாயமாகியுள்ளது. படைகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் தேசிய பாதுகாப்பு அகாதெமி முக்கியப் பங்களிப்பை நல்கி வருகிறது. ஒருங்கிணைந்த தன்மையே அகாதெமியின் அடிப்படை கொள்கையாக காணப்படுகிறது. போா் முறைகளில் எத்தனை மாற்றங்கள் தோன்றினாலும், அவற்றைத் திறம்பட எதிா்கொள்வதற்கு சிறந்த தலைமையே அவசியம். பயிற்சியை நிறைவு செய்துள்ள வீரா்கள் அனைவரும் தலைமைப்பண்பை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா். பயிற்சியை நிறைவுசெய்த வீரா்களுடன் தலைமைத் தளபதி கரம்வீா் சிங் கலந்துரையாடினாா். அவா்களுக்கு நினைவுப்பரிசையும் வழங்கினாா். இதே பாதுகாப்பு அகாதெமியில் கரம்வீா் சிங் பயிற்சி பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com