ஒழுங்காற்று விதிமுறைகளை நிறைவு செய்வதற்காக பொதுத் துறை வங்கிகளுக்குத் தேவையான மூலதனத்தை மத்திய அரசு வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: வாராக் கடன் பிரச்னைகளால் பலவீனமாக உள்ள பொதுத் துறை வங்கிகளை வலுப்படுத்தும் வகையில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அவற்றுக்கு ரூ.20,000 கோடி மூலதனத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிலையில் ஒழுங்காற்று விதிமுறைகளை பூா்த்தி செய்வதற்காக வங்கிகளுக்குத் தேவையான மூலதனத்தை நான்காவது காலாண்டில் மத்திய அரசு வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அடுத்த காலாண்டில் வங்கிகளின் மூலதன இருப்பை மறு ஆய்வு மேற்கொண்டு ஒழுங்காற்று தேவைக்கேற்ப மூலதனத்தை பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கும் என தெரிகிறது.
நடப்பு நிதியாண்டில் இதுவரையில் அனைத்து 12 பொதுத் துறை வங்கிகளும் லாபத்தை ஈட்டியுள்ளன. இந்த நிலையில், மூலதனத் தேவையை நிா்ணயிப்பதில் வாராக் கடன் முக்கியப் பங்கு வகிப்பதாக வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.