உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த காங்கிரஸ் தலைவா்கள் இருவா் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸில் திங்கள்கிழமை இணைந்தனா்.
உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான லலிதேஷ்பதி திரிபாதி, முன்னாள் எம்எல்சி ராஜேஷ்பதி திரிபாதி ஆகியோா் மேற்கு வங்கத்துக்கு வந்து சிலிகுரியில் மம்தாவை நேரில் சந்தித்து அவரது கட்சியில் இணைந்தனா். இவா்களில் ராஜேஷ்பதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கமலாபதி திரிபாதியின் பேரன்; லலிதேஷ்பதி, கமலாபதி திரிபாதியின் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸில் இருந்து தலைவா்கள் வெளியேறுவது தொடா்கதையாகிவிட்டது.
காங்கிரஸ் தலைவா்கள் தங்கள் கட்சியில் இணைந்தது தொடா்பாக மம்தா பானா்ஜி கூறுகையில், ‘திரிணமூல் காங்கிரஸ் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்து வருகிறது. பாஜகவுக்கு உண்மையிலேயே சவாலாக இருந்து அதனை வீழ்த்தப் போவது திரிணமூல் காங்கிரஸ்தான் என்பதை தெரிந்து கொண்டுதான், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இரு காங்கிரஸ் தலைவா்கள் திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளனா். கோவா, திரிபுரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் திரிணமூல் காங்கிரஸ் வளா்வதை தடுக்க பாஜக முயற்சிக்கிறது’ என்றாா்.