சுல்தான்பூர்: மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக சர்வதேச துப்பாக்கிச்சூடு வீராங்கனை வர்திகா சிங் தொடுத்த அவதூறு வழக்கில் நவம்பர் 3-ஆம் தேதி உத்தர பிரதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
மத்திய பெண்கள் ஆணையத்தில் தன்னை உறுப்பினராக்குவதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அவரின் உதவியாளர்கள் விஜய் குப்தா, ரஜ்னீஷ் சிங் ஆகியோர் ரூ.1 கோடி கேட்டதாகவும், பின்னர் அதனை ரூ.25 லட்சமாக குறைத்துக் கொண்டதாகவும் வர்திகா சிங் குற்றஞ்சாட்டினார். அந்த ஆணையத்தின் உறுப்பினராக தன்னை நியமித்துள்ளதாக விஜய் குப்தாவும் ரஜ்னீஷ் சிங்கும் போலி கடிதம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சுல்தானில்பூரில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக அவர் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நவ.3-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக வர்திகா சிங்கின் வழக்குரைஞர் தெரிவித்தார்.