மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏ சௌமன் ராய் சனிக்கிழமை மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலேயே இணைந்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்த சௌமன் ராய் பேரவைத் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அவர் கலியாகஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்எல்ஏ ஆனார்.
இந்த நிலையில் அமைச்சரும் திரிணமூல் மூத்த தலைவருமான பார்த்தா சாட்டர்ஜி முன்னிலையில் சௌமன் ராய் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதையும் படிக்க | மம்தா போட்டியிடவுள்ள பவானிப்பூருக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
இதுகுறித்து சௌமன் ராய் கூறியது:
"சில காரணங்களுக்காக கலியாகஞ்ச் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், எனது மனம் திரிணமூலில்தான் இருந்தது. முதல்வர் மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்க மீண்டும் திரிணமூலில் இணைந்துள்ளேன். முக்கியமான நேரத்தில் நான் கட்சியில் இல்லாமல் போனதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்."
மேற்கு வங்க பேரவைத் தேர்தலுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் சிலர் பாஜகவில் இணைந்தனர். பேரவைத் தேர்தலில் 213 தொகுதிகளில் வென்று திரிணமூல் ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்று தோல்வியடைந்தது. இதன்பிறகு, பாஜக தலைவர்கள் சிலர் மீண்டும் திரிணமூலில் இணையத் தொடங்கினர். முன்னதாக, பாஜக முக்கியத் தலைவர் முகுல் ராய் மற்றும் அவரது மகன் திரிணமூலில் இணைந்தனர்.