ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். ராணுவத் தரப்பில் 3 வீரா்கள் காயமடைந்தனா்.
பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் கடந்த சில நாள்களாக சந்தேகத்துக்கிடமான நடமாட்டங்கள் தென்பட்டன. இதையடுத்து, ராணுவத்தினா் கடந்த சனிக்கிழமை கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினா்.
இந்நிலையில், இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். மற்றவா்கள் வந்த வழியிலேயே தப்பியோடிவிட்டனா். இந்தியத் தரப்பில் 3 வீரா்கள் காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்கள், போதைப்பொருள் பறிமுதல்: இதற்கு நடுவே ஜம்மு மாவட்டத்தில் சா்வதேச எல்லையை ஒட்டிய பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினா் (பிஎஸ்எஃப்) தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள், வெடிப்பொருள்கள், போதைப் பொருள்கள், இந்திய கரன்சியின் கள்ள நோட்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினா். இவை பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.