பெங்களூரு: மூக்கு வழியாக வளர்ந்த மூளையை வெட்டி எடுத்து, 8 வயது சிறுவனின் கடுந்துயரத்தைப் போக்கியுள்ளனர் பெங்களூரு மருத்துவர்கள்.
சிறுவனுக்கு ஏற்பட்ட மரபணுக் கோளாறு காரணமாக மண்டைஓட்டில் விரிசல் ஏற்பட்டு, மூளை கீழ்நோக்கி வளர்ந்து, மூக்கு வழியாக வாய்ப்பகுதியை அடைந்திருந்தது. அதாவது, சிறுவன் தாயின் வயிற்றுக்குள் இருக்கும் போது அவனது மண்டை ஓடு முழுமையாக மூடாமல் இருந்ததே இதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது.
மூக்கு வழியாக மூளையின் ஒரு பகுதி வாயில் தொங்கிக் கொண்டிருந்ததால் பல ஆண்டுகளாக சிறுவன் பல அவதிகளை அடைந்து வந்தான். அவன் சிரமப்படுவதைப் பார்த்து என்னசெய்வதென்று தெரியாமல் கவலையடைந்தனர் அவனது பெற்றோர்.
அது மட்டுமல்ல, மூளையின் கீழ்நோக்கிய வளர்ச்சியால், அவனது கண் பார்வை பாதிக்கப்பட்டது. முகமும் மாற்றமடைந்தது. வாய்ப்பகுதியும் முற்றிலும் சேதமடைந்தது.
பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்றும், சிறுவனின் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. இறுதியாக பெங்களூருவில் உள்ள ஆஸ்டெர் சிஎம்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் சிறுவனுக்கு 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, மூளையின் ஒரு துண்டுப் பகுதியை அகற்றினர். மூளைக்கும், கண்ணுக்கும் இடையிலான எலும்புப் பகுதியை சரி செய்தனர்.
இதையடுத்து, அந்தச் சிறுவன் மீண்டும் தனது புன்னகை முகத்தக்கு மாறினார். மூளையின் ஒரு துண்டு அகற்றப்பட்டாலும், சிறுவனின் செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லை, பழையபடி புத்திக்கூர்மையுடன் செயல்படுகிறான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.