நாட்டில் இதுவரை 7.3 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் 7.3 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்குத் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது.
இன்று காலை 7 மணி வரை, 11,53,614 முகாம்களில் 7,30,54,295 பயனாளிகளுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
77-வது நாளான நேற்று (ஏப்ரல் 02, 2021) நாடு முழுவதும் 30,93,795 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கர்நாடகம், சத்தீஸ்கர், தில்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில் அன்றாட கரோனா புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 81.42 விழுக்காடு பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.