45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளது. நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது.
இது தொடா்பாக மத்திய பணியாளா் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா பரவல் சூழலை அரசு கவனமாக கையாண்டு வருகிறது. அதேபோல தடுப்பூசி செலுத்தப்படுவதிலும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முன்னுரிமை அடிப்படையில் படிப்படியாக கரோனா தடுப்பூசித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனா்.
இதன் அடிப்படையில் 45 வயதுக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியா்கள் அனைவரும் அனைவரும் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு, அந்த தொற்று பரவுவதைத் தடுக்கும் அரசின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.