மே 2 ஆம் தேதிக்குப் பிறகு முதல்வர் மம்தா பானர்ஜி, 'ஜெய் ஸ்ரீராம்' என்று கூறத் தொடங்கிவிடுவார் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
பாஜக தலைவர்கள் மேற்குவங்கத்தை முற்றுகையிட்டுள்ள நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஹூக்ளி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் ஆன்டி- ரோமியோ குழு அமைக்கப்படும்.
பாஜக ஆட்சிக்கு வருவதை மக்கள் உறுதி செய்துவிட்டார்கள். மே 2 வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு முதல்வர் மம்தா பானர்ஜி, 'ஜெய் ஸ்ரீராம்' என்று கூறத் தொடங்கிவிடுவார்.
உத்தரப்பிரதேசத்தில் சிஏஏவுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது முதல்வர் மம்தா பானர்ஜி, வன்முறையைத் தூண்ட ஆதரவு தெரிவித்தார்' என்று பேசினார்.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 10, 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.