முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஓய்வு கொடுக்க மேற்குவங்க மக்கள் முடிவு செய்துவிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தின்ஹாட்டா பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர்,
பாஜகவுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளிப்பதன் மூலமாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சிறிது ஓய்வு அளிக்க இங்குள்ள மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
இன்றைய பிரசாரம் மற்றும் சாலைப் பேரணியில் தொண்டர்கள், மக்கள் கூடியுள்ளதைப் பார்க்கும்போது மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை மக்கள் வரவேற்கிறார்கள் என்று நன்றாகத் தெரிகிறது.
எனவே, மம்தாவுக்கு ஓய்வு கொடுங்கள், பாஜக உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறது.
மேற்குவங்க மக்கள் ஊழலுக்கு எதிரானவர்கள். மேலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட வேண்டும் என்று மக்கள் விரும்பினால், அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
மேற்குவங்கத்தில் ஆம்பன் புயலுக்குப்பின்னர் மத்திய அரசு மக்களுக்கு அனுப்பிய நிவாரணப் பொருள்கள் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களின் வீட்டில் இருந்ததற்கு மக்கள் இந்த தேர்தலின் மூலமாக அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று பேசினார்.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 10, 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.