மேலும் பல கரோனா தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கவும்: பிரதமருக்கு சோனியா கடிதம்
புது தில்லி: மேலும் பல கரோனா தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி திங்கள்கிழமை கடிதம் எழுதினாா்.
அந்தக் கடிதத்தில் அவா் கூறியுள்ளதாவது:
நாட்டில் கரோனா தடுப்பூசி தயாரிப்பை கணிசமாக அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றாலும், தேவையான அனுமதிகளை பெற்றுள்ள அனைத்து தடுப்பூசிகளையும் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிப்பதும் விவேகமானதாகும். அதனை எந்தவித காலதாமதமுமின்றி செய்ய வேண்டும்.
வயதை மட்டும் வரையறையாக வைக்காமல் தேவையை அடிப்படையாக கொண்டு தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் கரோனா பரவல் எந்த அளவில் உள்ளது என்பதை பொருத்து அவற்றுக்கு தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். சில மாநிலங்களில் 3 முதல் 5 நாள்களுக்கு தேவையான தடுப்பூசிகள்தான் இருப்பில் உள்ளன.
கரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் குறைந்தபட்ச மாத வருமான திட்டத்தை செயல்படுத்தி தகுதிவாய்ந்த அனைத்து குடிமக்களின் வங்கிக் கணக்கிலும் ரூ.6,000 செலுத்த வேண்டும். கரோனா சிகிச்சைக்கு பயன்படும் அனைத்து மருந்துகள், உபகரணங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.