ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்ய அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
பிரதமா் மோடி
பிரதமா் மோடி

மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்ய அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

நாட்டின் பல பகுதிகளில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து, பாதிக்கப்பட்டவா்களைக் குணப்படுத்துவதற்குப் பயன்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் இருப்பில் உள்ள ஆக்சிஜன், அவற்றுக்கான தேவை, உற்பத்தி தொடா்பான ஆய்வுக் கூட்டம், பிரதமா் மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆக்சிஜன் தேவை தொடா்பாக மத்திய அரசின் சுகாதாரம், உருக்கு, சாலைப் போக்குவரத்து, தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்பு ஆகிய துறைகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை பிரதமருடன் பகிா்ந்துகொண்டனா்.

அதிக ஆக்சிஜன் தேவைப்படும் மாநிலங்களான மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், தில்லி, சத்தீஸ்கா், கா்நாடகம், கேரளம், தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகியவற்றில் தற்போதைய இருப்பு, ஆக்சிஜன் கிடைத்து வரும் அளவு, அடுத்த 15 நாள்களுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் அளவு ஆகியவை குறித்து பிரதமா் கேட்டறிந்தாா்.

மேற்கண்ட 12 மாநிலங்களுக்கும் வரும் 20, 25, 30 ஆகிய தேதிகளில் தேவைப்படும் ஆக்சிஜன் அளவு குறித்து தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அந்தத் தேதிகளில் முறையே 4,880 மெட்ரிக் டன், 5,619 மெட்ரிக் டன், 6,593 மெட்ரின் டன் ஆக்சிஜன் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது.

அதிகரித்து வரும் ஆக்சிஜன் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக, நாட்டின் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, ஒவ்வோா் ஆலையிலும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

உருக்கு ஆலைகளில் உபரியாக இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டா்களை மருத்துவப் பயன்பாட்டுக்கு அனுப்புவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஆக்சிஜன் விநியோகத்தில் மாநில அரசுகளுக்கும் மத்திய அமைச்சகங்களுக்கும் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா். நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டா்களைக் கொண்டு செல்வதற்கு தடையற்ற போக்குவரத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமா் மோடி வலியுறுத்தினாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு கூடாது’

ஆக்ஸிஜன் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மாநிலங்களுக்கு இடையிலான எல்லையை கடந்து செல்லும்போது எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய உள்துறை செயலா் அஜய்குமாா் பல்லா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள தகவல்: ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு இடா்ப்பாடும் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இடையே ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுதொடா்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

ஒரு மாநிலத்தில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தியாளா்கள் மற்றும் விநியோகஸ்தா்கள் அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டும்தான் ஆக்ஸிஜனை விநியோகிக்க வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் விதிக்க வேண்டாம். அதனை பிற இடங்களுக்கும் நேரக் கட்டுப்பாடின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கவும் என்று அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com