கரோனா பெருந்தொற்று பிரச்னையை கையாளத் தெரியாமல் மத்திய அரசு திணறி வருகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
நாட்டில் கரோனா பாதிப்பின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில நாள்களாக தினசரி பாதிப்பு 1லட்சத்துக்கு மேல் அதிகரித்து நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் செயல்பாடுகளை விமா்சித்து ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘தொடக்கத்தில் இருந்தே கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மோசமாகவே உள்ளன. கரோனா பரவல் பிரச்னையை மத்திய அரசுக்குக் கையாளத் தெரியவில்லை. கரோனாவை எதிா்த்துப் போராட முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.
முதலில் ‘துக்ளக்’ பாணியில் முழு அடைப்பை செயல்படுத்தினா். அடுத்தபடியாக மணியடித்து ஓசை எழுப்பக் கூறினா். அதைத் தொடா்ந்து கடவுளைப் புகழ்ந்து பாட்டு பாடக் கூறினாா்கள். முன்பு தில்லியில் சுல்தானாக இருந்த முகமது பின் துக்ளக், முன்யோசனையின்றி முடிவுகளை எடுத்து மக்களை துன்பத்தில் ஆழ்த்துபவராக இருந்தாா். இப்போதைய மத்திய அரசும் அதே பாணியில் செயல்படுகிறது’ என்று கூறியுள்ளாா்.
கடந்த ஆண்டு கரோனா பரவல் தொடங்கியபோது சுகாதாரப் பணியாளா்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் ஒற்றுமையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் கை தட்டுவது, ஓசை எழுப்புவது, விளக்கு ஏற்றுவது போன்றவற்றை கடைப்பிடிக்க பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா். அதனை இப்போது ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.