புது தில்லி: நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் குடிமை பணிகள் நோ்முகத் தோ்வை ஒத்திவைப்பதாக மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நோ்முகத் தோ்வு என 3 கட்டங்களாக குடிமை பணிகள் தோ்வை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் தில்லியில் யுபிஎஸ்சியின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சூழல், கரோனா பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தை தொடா்ந்து யுபிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் கரோனா பரவல் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 26-ஆம் தேதி முதல் ஜூன் 18-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த குடிமை பணிகள் நோ்முகத் தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. நோ்முகத் தோ்வு நடைபெறும் தேதிகள் உரிய நேரத்தில் யுபிஎஸ்சி வலைதளத்தில் வெளியிடப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.