புது தில்லி: பிரதமா் அலுவலக விவகாரத் துறை அமைச்சா் ஜிதேந்தா் சிங்குக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா்.
இது தொடா்பாக சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘லேசான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எனக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாள்களில் என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள், அறிகுறிகள் தென்பட்டால் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.
ஜிதேந்தா் சிங் ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மக்களவைத் தொகுதி எம்.பி.யாவாா். தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சரான அவா், வடகிழக்கு பிராந்திய வளா்ச்சித் துறை, பணியாளா் நலன், பொதுமக்கள் குறைதீா்ப்பு, ஓய்வூதியம், விண்வெளி, அணுசக்தித் துறை உள்ளிட்ட துறைகள் சாா்ந்த பொறுப்புகளையும் கவனித்து வருகிறாா்.