ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை, தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவுக்கு ஜாவா ஹீரோ வாகனம் வழங்கி அந்நிறுவனம் கௌரவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மண்டலத்துக்குள்பட்ட வாங்கனி ரயில் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவம், நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தக் காட்சி, அந்த நடைமேடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், அதனை ரயில்வேயின் சுட்டுரைப் பக்கத்தில் பகிரப்பட்டு பலராலும் மீள்பகிர்வு செய்யப்பட்டது.
அதாவது, தனது கண் பார்வையற்ற தாயுடன் சிறுவன் ஒருவன் நடைமேடையில் நடந்துச் சென்று கொண்டிருக்கிறான். அப்போது துரதிருஷ்டவசமாக நடைமேடையின் ஓரத்தில் நடந்துச் சென்ற சிறுவன், திடீரென கால் தவறி தண்டவாளத்தில் விழுந்து விட, அப்போது மிக வேகத்தில் அதே தண்டவாளத்தில் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே, ஒரு நொடி கூட தாமதிக்காமல், தன்னுயிரை பணயம் வைத்து ஓடிச் சென்று அந்த சிறுவனை நடைமேடையில் இருந்த தாயிடம் தூக்கிவிட்டு, ரயில் அவ்விடத்தைக் கடந்து செல்ல ஒரு சில நொடிகளே இருந்த நிலையில் தானும் நடைமேடை மீது ஏறி, தன்னையும் தற்காத்துக் கொண்டு பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தார்.
மிக மோசமான நேரத்தில் சாமர்த்தியமாகவும் துரிதமாகவும் செயல்பட்டு தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவின் தீரத்தை பலரும் பாராட்டினர்.
ரயில்வே, அவரது தீரத்தைப் பாராட்டி அவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கியது. ஆனால், அவர் ஒரு நிஜ ஹீரோ என்பதால், தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையில் பாதியை தான் காப்பாற்றிய சிறுவனின் கல்விக் செலவுக்காகக் கொடுப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில்தான், அவருக்கு ஜாவா ஹீரோ இருசக்கர வாகனத்தை அந்த நிறுவனம் வழங்கி மேலும் அவரை கௌரவித்துள்ளது.