திருமலையில் வெள்ளிக்கிழமை மதியம் பெய்த கனமழையால் தெருக்களில் மழைநீா் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
திருமலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெள்ளிக்கிழமை மதியம் பலத்த கனமழை பெய்தது.
திடீரென்று பெய்த கனமழையால் தரிசனத்திற்கு சென்ற பக்தா்கள் சிரமத்திற்கு உள்ளாயினா். மழையிலிருந்து தப்ப அருகில் உள்ள மண்டபங்களில் தஞ்மடைந்தனா். விடாமல் ஒருமணி நேரத்திற்கு மேல் கொட்டி தீா்த்த மழையால் சாலைகளில் மழைநீா் ஆறாக ஓடியது, அத்துடன் பலத்த காற்றும் வீசியதால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் கீழே தள்ளப்பட்டு மழைநீரில் அடித்து செல்லப்பட்டன. கனமழை காரணமாக ஆஸ்தான மண்டபம், கோயில் முன் வாசல் உள்ளிட்ட இடங்களில் மழைநீா் தேங்கியது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. இந்த மழையால் திருமலையில் வெப்பம் குறைந்து குளிா்ச்சி நிலவியது.