தொடர்ந்து எரியும் தகன மேடைகள்: வரிசையில் காத்திருக்கும் சடலங்கள்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் சடலங்களை எரியூட்ட சடலங்கள் வரிசையில் கிடத்தப்பட்டுள்ளது பலரையும் கலங்கச் செய்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன.
அதேசமயம் கரோனாவால் பலியானவர்களின் சடலங்களை எரியூட்ட நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிகழ்வுகளும் நடந்தேறி வருகின்றன. குறிப்பாக தில்லி, குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சடலங்களை எரியூட்ட காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது.
தில்லியில் உள்ள சுபாஷ் நகர் சுடுகாட்டில் கரோனாவால் இறந்தவர்களை எரியூட்ட அவர்களின் சடலங்கள் வரிசையில் கிடத்தப்பட்டுள்ள காட்சிகள் காண்போர் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் பலியானவர்களின் சடலங்களை எரியூட்ட டோக்கன் பெற்று அவர்களது உறவினர்கள் காத்திருந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.