ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள உள்விளையாட்டரங்கம் கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் இந்த மைதானத்தில் 110 படுக்கைகள் அமைக்கும் வகையில் இடவசதியுள்ளது.
இது குறித்து பேசிய கரோனா சிகிச்சை மைய கண்காணிப்பாளர் வாசிம் அஹமது, உள்விளையாட்டரங்கில் 110 கரோனா படுக்கைகளை அமைக்க இயலும். ஆனால் தற்போது வரை 66 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள இடங்களில் படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு படுக்கைக்கு இடையிலும் 2 முதல் 3 அடி அளவு இடைவெளி வழங்கப்பட்டுள்ளது. நடைபாதைகளில் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் சிறந்த இடமாக உள்விளையாட்டரங்கம் மாறியுள்ளது என்று கூறினார்.