புது தில்லி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிக்கு செயற்கை சுவாச சிகிச்சை வசதி கிடைக்கப் பெறவில்லை என்று நீதிமன்ற வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
இதுகுறித்து நீதிமன்ற வட்டாரங்கள் கூறியதாவது:
தில்லியில் தீஸ் ஹஜாரி நீதிமன்ற வளாகத்தில் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வரும் நுபுர் குப்தா என்ற பெண் நீதிபதி கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார். 32 வயதான அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை உதவி தேவைப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு அந்த சிகிச்சை பெறுவதற்கு வென்டிலேட்டர் கிடைக்கவில்லை. அந்த நீதிபதிக்கு கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் "தில்லி கரோனா' செயலியின் தகவலின்படி, தில்லியில் புதன்கிழமை மாலை 4.30 மணி நிலவரப்படி , மொத்தமுள்ள 1,657 படுக்கைகளில் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய 5 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் மட்டுமே இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தில்லியில் கரோனா தொற்று மிகவும் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தில்லியில் புதிதாக 24,149 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 381 பேர் உயிரிழந்தனர்.