தில்லி காவல் ஆணையராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய உள்துறை அமைச்சகம், ராகேஷ் அஸ்தானாவை தில்லி போலீஸ் ஆணையராக நியமித்து உத்தரவு வெளியிட்டது. ஜூலை 31 ஆம் தேதியுடன் ஓய்வுபெற இருந்த அவருக்கு இதன் மூலம் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு குஜராத் பிரிவு ஐ.பி.எஸ். அலுவலரான ராகேஷ் அஸ்தானா கடைசியாக எல்லை பாதுகாப்புப் படைப் பிரிவின் டைரக்டா் ஜெனரலாக பணியாற்றி வந்தார்.
ராகேஷ் அஸ்தானாவின் நியமனம் சட்ட விரோதமானது என தில்லி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, அஸ்தானாவின் நியமனத்திற்கு எதிராக எம்.எல். சர்மா என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நியமனம் அமைந்துள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணிக்காலமுடைய அலுவலர்களையே மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்துறை அமைச்சக அலுவலர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதி சூர்யா காந்த் ஆகியோர் கொண்ட அமர்வுக்கு முன்பு இந்த மனுவின் விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.