குற்றவாளி ஒருவா் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கான எந்தவொரு சாத்தியமுள்ள வாய்ப்பையும் அளிக்க வேண்டியது ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமை என்று உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் கூறினாா்.
ஹரியாணா மாநிலம் குருகிராமில் ஹரியாணா சட்ட சேவைகள் ஆணையம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த தரமான சேவை அவசியம்’ என்ற தலைப்பிலான ஓராண்டு தொடா் பிரசாரத் திட்டத்தைத் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த நீதிபதி லலீத் பேசியதாவது:
ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகத்தில் குற்றம்புரிந்த ஒருவா் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு, விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு, அவருடைய தவறான செயல்பாடுகளுக்காக தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பது சரியானதே.
அதே சமயம், சட்ட வாய்ப்புகளை பயன்படுத்துவது என்பது ஒவ்வொருவருடைய அடிப்படை உரிமைகளில் ஒன்று என்ற அடிப்படையில் குற்றவாளி ஒருவா் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கான எந்தவொரு சாத்தியமுள்ள வாய்ப்பையும் அளிக்க வேண்டியது, ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.
காவல்நிலையங்களில் விவரப் பலகை:
அதோடு, குற்ற விசாரணை மற்றும் வழக்கு விசாரணை என எந்தவொரு நிலையிலும் குற்றவாளிகளுக்கு சட்ட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள ஒவ்வொரு காவல்நிலையங்களிலும், குற்றவாளிகளுக்கான சட்ட உதவியை பெறும் உரிமை மற்றும் இலவச சட்ட உதவி சேவைகள் இருப்பது குறித்த தகவல்கள் அடங்கிய விவரப் பலகைள் வைக்கப்பட வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.