பணமோசடி வழக்கு தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தியின் தாயார் குல்ஷான் நஸீர் அமலாக்கத் துறை முன் புதன்கிழமை ஆஜரானார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள மெஹபூபா முஃப்தியின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு இரண்டு நாட்குறிப்புகளைப் பறிமுதல் செய்தது.
அந்த நாட்குறிப்புகளில் முதல்வராக மெஹபூபா முஃப்தி பதவி வகித்தபோது பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு முதல்வர் நிதியிலிருந்து முறைகேடாக பணம் அனுப்பப்பட்ட தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் குல்ஷான் நஸீரின் வங்கிக் கணக்குகளுக்கும் லட்சக்கணக்கான ரூபாய் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | புற்றுநோய்களின் தலைநகரம் ஆகிறதா வடகிழக்கு மாநிலங்கள்?
இதுதொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 18-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு குல்ஷான் நஸீருக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் சம்மன் அனுப்பப்பட்டது.
இதன் அடிப்படையில் ஸ்ரீநகரிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் குல்ஷான் நசீர் புதன்கிழமை ஆஜரானார்.
கடந்த ஜூலை 14-ஆம் தேதி விசாரணை நடத்த குல்ஷான் நஸீருக்கு அமலாக்கத் துறை ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.