மீரட்: மீரட் மேம்பாட்டு திட்டத்தின் முன்னாள் துணைத் தலைவர் ராஜேஷ் குமார் யாதவ் செய்திருக்கும் ஊழல் பலரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
அரசு அதிகாரிகளுக்கு வீடு ஒதுக்கும் திட்டத்தின் கீழ், தனக்கே தனக்காக ஒரு நீச்சல் குளம், பயிற்சிக் கூடம், தோட்டம் என சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஒரு மாளிகை வீட்டை தனது பெயருக்கு ஒதுக்கிக் கொண்டுள்ளார் ராஜேஷ் குமார். இவர் தற்போது உத்தரப்பிரதேச அரசின் விளையாட்டுத் துறை சிறப்பு செயலாளராக உள்ளார்.
மாநில அரசின் கணக்குத் தணிக்கையில் இந்த மாபெரும் ஒதுக்கீடு கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டில் அரசுத் துறை அதிகாரிகளுக்கு தலா 2,426 சதுர அடிப் பரப்பளவில் குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு கொண்டு வந்தது. ஆனால், ராஜேஷ் குமாருக்கு ஒதுக்கப்பட்டதோ 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் வீடு மற்றும் 9,700 சதுர அடிப் பரப்பளவில் நீச்சல் குளம் உள்ளிட்டவற்றுக்கு. அதாவது, ஒரு அரசு அதிகாரிகளுக்கு ஒதுக்க வேண்டிய அளவை விட சுமார் 12 மடங்கு அதிகமான நிலப்பரப்பு அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ.8 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதாவது அந்த நிலப்பரப்பு மட்டும் ரூ.5 கோடி. கட்டடம் கட்ட ரூ.3 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம், நிலத்தை ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தில் ராஜேஷ் குமார் இருந்ததுதான்.
ஆனால் 2016ஆம் ஆண்டிலேயே கட்டடம் கட்டி முடிப்பதற்குள், அதன் அதிகபட்ச நிதிச்செலவால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, அது குறித்து பல்வேறு புகார்களும் முன்வைக்கப்பட்டன.
அப்போதே அந்த கட்டடம் கைவிடப்பட்டது. தற்போது அது புதர் மண்டி, ஒரு பழைய பங்களா போல காட்சியளிக்கிறது. இத்தனை முறைகேடுகளையும் செய்த ராஜேஷ், அந்த பங்களாவுக்கு குடியேறவேயில்லை. அந்த பங்களாவை ஏலம் விடவும் 2019ல் உத்ததரப்பிரதேச அரசு முயற்சித்தது. ஆனால், அந்த பங்களாவை யாருமே ஏலம் எடுக்கவில்லை.
இப்போது குடிபோகாத ஒரு பங்களாவை தனக்காக ஒதுக்கியதற்காக விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார் ராஜேஷ்குமார்.