உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங் சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 89.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான அவா், உடல்நலக் குறைவு காரணமாக லக்னெளவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 4-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை அறிவித்தனா். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் அரசு சாா்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தாா்.