ராஜஸ்தானில் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதையொட்டி, மாணவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரித்து பள்ளிக்கு வரவழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளதையடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலாக கல்லூரிகளும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியுள்ளன.
அந்தவகையில், ராஜஸ்தானில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
50% சதவிகித மாணவர்களுடன் இரண்டு பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்படும். அதன்படி 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 12.30 வரை ஒரு குழுவும், 12.30 -5.30 வரை மற்றொரு குழுவும் வரவேண்டும்.
அதுபோல 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 8 முதல் பிற்பகல் 1 வரையிலும், மற்றொரு குழுவுக்கு பிற்பகல் 1-6 வரையிலும் நடைபெறும்.
முழுமையாக தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வகுப்பறைகள் காற்றோட்டமாக இருக்க வேண்டும். கரோனா வழிமுறைகளை அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும்.
தமிழகத்திலும்செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.