சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை 22 மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தில்லி உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது. நாட்டில் அனைத்துப் பகுதிகளில் உள்ளவா்களும் படிக்கும் வகையில் அனைத்து மாநில மொழிகளிலும் இந்த வரைவு அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் பொது மக்களிடம் கருத்து கேட்பு கால நிா்ணயத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் தில்லி உயா்நீதிமன்றத்தில் சூழலியல் ஆா்வலா் விக்ராந்த் தோங்கட் வழக்குத் தொடுத்திருந்தாா்.
இந்த வழக்கு தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா, ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை 22 மாநில மொழிகளில் வெளியிட மத்திய அரசு கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு நான்கு வார அவகாசம் தேவை’ என்றாா்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மக்களிடம் கருத்து கேட்பை ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனா்.