உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமிக்கு அருகில் உள்ள மசூதியை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அம்மாநில பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுராவிலுள்ள மசூதிகள் நீதிமன்றத்தின் உதவியுடன் அகற்றப்படும். மேலும் ராமரும், கிருஷ்ணரும் தங்கள் முன்னோர்கள் என்பதை இந்திய இஸ்லாமியர்களின் உணர வேண்டும் என்று சுதந்திர போராட்ட காலகட்டத்தில் இருந்த சமூக ஆர்வலரான ராம் மனோகர் லோஹியா கூறியதை சுட்டிக்காட்டினார்.
பாபர், அக்பர், ஒளரங்கசீப் போன்றோர் படையெடுத்து வந்தவர்கள். அவர்கள் கட்டிய கட்டடங்களுடன் உங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளாதீர்கள் என்றும் தெரிவித்தார்.
மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி (கிருஷ்ணர் கோயில்) அருகில் உள்ள மசூதியை இஸ்லாமிய சமூகத்தினர் முன்வந்து ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.
இந்தியாவிலுள்ள அனைத்து இஸ்லாமியர்களும் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். 200 - 250 ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்துக்களாக இருந்த அவர்கள் இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள் என்று கூறினார்.