ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் 3 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டும், அவருக்கு கரோனா தொற்று இருப்பது மத்தியப் பிரதேசத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் வைராலஜி துறையில் ஆராய்ச்சியாளராக இருக்கும் இளைஞர், நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை ஜபல்பூர் வந்தார். ராபிட் ஆண்டிஜென் பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டபோதிலும், ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிக்க | 7 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் 'ஒமைக்ரான்' பாதிப்பு
இதைத் தொடர்ந்து, அவர் ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இவரும், இவரது சக பணியாளரும் ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசியும், பூஸ்டர் டோஸும் செலுத்திக் கொண்டுள்ளதாக ஜபல்பூர் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். இதுவரை அவருடன் தொடர்பிலிருந்தவர்களாக 40-50 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜபல்பூர் வரும்முன் அவர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசிக்குச் சென்றுள்ளனர்.
ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஜெர்மனியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.