முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில், அவர் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயரதிகாரிகள் 14 பேருடன் சூலூர் விமானப் படை தளத்திலிருந்து புதன்கிழமை பகல் 11 மணியளவில் வெலிங்கடன் சென்ற விமானம் குன்னூர் அருகே 12.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய விபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடல்நிலை குறித்து முதற்கட்டமாக எந்தத் தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இதையும் படிக்க | ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்படி?
இதற்கிடையே தற்போது வெளியிடப்பட்ட செய்தியில், விபின் ராவத் மற்றும் ஹெலிகாப்டரில் பயணித்த 12 பேர் விபத்தில் பலியாகிவிட்டதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விபத்தில் அவரது மனைவி மதுலிகாவும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் உடல் வைக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதிகள், முதல்வர் ஆகியோர் நாளை (டிச.9) காலை 8 மணிக்கு பயிற்சிக் கல்லூரியின் பொது மைதானத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணித்தவர்களின் உடல்கள் தீக்கிரையாகியுள்ளன. தீக்காயங்களால் உயிரிழந்த உடல்களை மரபணு பரிசோதனை செய்து அடையாளம் காணப்பட்ட பிறகு சென்னை வாயிலாக தில்லிக்கு அனுப்பிவைக்கப்படும்.
தில்லியில் முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் உடல் அரசியல் தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இறுதி சடங்குகள் தில்லியில் ராணுவ மரியாதையுடன் நடைபெறவுள்ளது.