விபின் ராவத் மரணம்: ராகுல் காந்தி இரங்கல்
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பலியானதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் காப்டன் வருண் சிங் தவிர, மற்ற 13 பேரும் பலியானதாக இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்த விபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் உடல்கள் நாளை புது தில்லி கொண்டுச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபின் ராவத் மரணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரங்கல் வெளியிட்டுள்ளார். அதில், முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எதிர்பாராத மிகமோசமான துயரம்.
இந்த விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
இந்த கடினமான சூழ்நிலையில், இந்தியா ஒன்றுபட்டு நிற்கும் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, கோவையிலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றுதான் குன்னூர் அருகே புதன்கிழமை விபத்தில் சிக்கியது.
நஞ்சப்ப சத்திரம் அருகே சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதிக்கு மிக அருகே ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில், மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ராணுவத்தினரும், காவல்துறையினரும் ஈடுபட்டனர். இறுதியாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த 14 பேரில், 10 பேர் சடலமாகவே மீட்கப்பட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் 3 பேர் பலியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.