ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி விபின் ராவத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் எல்.எஸ்.லிடருக்கு இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.
இந்த விபத்தில் பலியான அனைவரின் உடல்களும் வியாழக்கிழமை மாலை குன்னூரிலிருந்து தில்லிக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன.
நேற்று இரவு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாலம் ராணுவ தளத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் எல்.எஸ்.லிடருக்கு குடும்ப முறைப்படி இறுதிச் சடங்கு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவல், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.