விபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்களுக்கு ராகுல் காந்தி, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அஞ்சலி செலுத்தினர்.
குன்னூா் அருகே புதன்கிழமை நேரிட்ட ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த விபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்கள், சூலூா் விமானப் படைத் தளத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை தில்லி கொண்டுவரப்பட்டன.
தில்லி விமான நிலையத்தில் தேசியக்கொடி போா்த்தப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டிருந்த விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு பிரதமா் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், பாதுகாப்புப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து விபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள், தில்லி எண்.3 காமராஜ் மாா்க்கில் உள்ள அவா்களின் இல்லத்தில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனே கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட திமுக எம்.பி.க்களும் விபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பல்வேறு மாநில முதல்வர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையும் படிக்க | விபின் ராவத்திற்கு ராணுவ மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு