ஸ்ரீநகரில் ஆயுதங்கள் ஏந்திய காவல் துறையினர் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர்கள் இருவர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
இதுபற்றி காவல் துறை அதிகாரிகள் கூறியது:
"ஸிவான் பகுதியில் இன்று மாலை காவல் துறையினருடன் சென்றுகொண்டிருந்த பேருந்து பயங்கரவாதிகளால் தாக்குதலுக்குள்ளானது. தாக்குதலில் 14 காவலர்கள் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடந்த இடம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது."
தில்லி நாடாளுமன்றத் தாக்குதலின் 20-ம் ஆண்டு நினைவு நாளில் இந்தப் பயங்கரவாதச் சம்பவம் அரங்கேறியுள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதற்கு இன்னும் பொறுப்பேற்கவில்லை.