மாநிலங்களவையில் அனைத்து உறுப்பினர்களும் கண்ணியத்தை பேண வேண்டும் என அவைத் தலைவர் வெங்கைய நாயுடு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து இன்றைய மாநிலங்களவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது வெங்கைய நாயுடு பேசியதாவது:
“உறுப்பினர்கள் அனைவரும் அமைதியாக தங்கள் இடங்களில் அமருங்கள். அவையின் கண்ணியத்தை அனைவரும் பேண வேண்டும். இதுபோன்ற அழுத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
நான், எதிர்க்கட்சித் தலைவர், அவைத் துணைத் தலைவர் மற்றும் மத்திய அரசின் மாநிலங்களவை தலைவரிடமும் முன்பே ஆலோசனை நடத்தினேன். இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டால் மறுபரிசீலனை செய்யப்படும் என அரசுத் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதை மீறி எதுவும் செய்ய இயலாது. நாடாளுமன்ற அவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபடுவதால் எதுவும் நடக்க போவதில்லை. அதை புரிந்து கொள்ளுங்கள். விதிமுறைகளை பின்பற்றி அவையை நடக்கவிட்டால் பரிசீலனை செய்யப்பட வாய்ப்புள்ளது. நீங்கள் எழுப்பும் தேவையில்லாத கோஷங்கள் அவையில் பதிவு செய்யப் போவதில்லை.”
மேலும், அமளி தொடர்ந்ததால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.