புது தில்லி: நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் சோழ மன்னர்களின் சாசனங்களை மீட்பதற்காக இந்திய தொல்லியல் துறை மூலம் அந்த நாட்டு அரசிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய கலாசார சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களவை திமுக குழுத் துணைத் தலைவர் கனிமொழி திங்கள்கிழமை பேசுகையில், "நெதர்லாந்து நாட்டிலுள்ள லைடன் பல்கலைக்கழகத்தில் நமது சோழ மன்னர்களின் பழங்கால சாசனங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இவை லைடன் ப்ளேட்ஸ் (அரசவை கொண்டிருக்கும் சாசனம்) என்று அழைக்கப்படுகின்றன. அவற்றை மீட்டு நம் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், "லைடன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் சோழ மன்னர்களின் சாசனங்களை மீட்பதற்காக நமது தொல்லியல் துறை மூலம் நெதர்லாந்து நாட்டு அரசுடன் தகுந்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.