லக்கிம்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் வியாழக்கிழமை காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றியதும், வன்முறையில் ஈடுபட்டதும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி எனவும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு நேற்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது.
இந்நிலையில், இன்று காலை மக்களவை தொடங்கியதில் இருந்து லக்கிம்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். இதனால், காலை முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து பிற்பகல் கூட்டம் தொடங்கியபோது அவைத் தலைவரின் இருக்கையின் முன்பு நின்று அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.