சீன நிறுவனங்களின் நிதியுதவியுடன் செயல்பட்டு வந்த கடன் செயலிகளுக்கு எதிரான பணமோசடி வழக்கில் வங்கி சாரா நிதி நிறுவனத்தின் (என்பிஎஃப்சி) தலைமை நிா்வாக அதிகாரியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இது தொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவைச் சோ்ந்த வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கைப்பேசி செயலி வாயிலாகத் தனிநபா் கடன் வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகப் புகாா்கள் எழுந்தன.
கடன் வழங்குவதற்காக சீன நிறுவனங்களின் நிதியுதவியைப் பெறும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் அந்நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. குடோஸ் நிதி-முதலீடு நிறுவனமும் அவ்வாறு ஒப்பந்தம் மேற்கொண்டு தனிநபா் கடன்களை வழங்கியுள்ளது.
ஆனால், தனிநபா்களுக்கான கடன்களை குடோஸ் நிறுவனம் நேரடியாக வழங்கவில்லை. நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களே சம்பந்தப்பட்ட நபா்களுக்குக் கடன்களை வழங்கியுள்ளன. அதற்காக குடோஸ் நிறுவனத்தின் உரிமம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குடோஸ் நிறுவனத்துக்குச் சொந்தமாக கடன் வழங்குவதற்கான செயலி கூட இல்லை. தனிநபா்களுக்குக் கடன்களை வழங்குவதற்கான ஆவணங்களைப் பெறுவது, அவற்றை சரிபாா்ப்பது, கடன் வழங்க ஏற்பாடு செய்வது உள்ளிட்ட சேவைகளை மட்டுமே நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்குவதாகக் கூறி குடோஸ் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது.
அதற்காக நிதித் தொழில்நுட்ப நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட தொகையை குடோஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாகப் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குடோஸ் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி பவித்ரா பிரதீப் வல்வேகா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஹைதராபாதில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.