எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்த பேச்சுவார்த்தைக்கு 4 எதிர்க்கட்சிகளை மட்டுமே அழைத்தது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பிளவுபடுத்த நிகழ்த்தும் சதி என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்தார்.
மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சிகளின் 12 எம்.பி.க்களை குளிர்காலக் கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்து கடந்த நவம்பர் 29ஆம் தேதி உத்தரவிட்டப்பட்டது. இதையடுத்து இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டு நாடாளுமன்ற பணிகள் தேங்கியுள்ளன.
இதையடுத்து மத்திய அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு 4 எதிர்க்கட்சிகளை மட்டுமே அழைத்திருந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது குறித்து எதிர்க்கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து பேச்சுவார்த்தை நடத்த 4 எதிர்க்கட்சிகளை மட்டுமே அரசு அழைத்துள்ளது. இது எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தும் சதியாக உள்ளது. இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையுடன் இருக்கின்றோம். பேச்சுவார்த்தைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.