வடகிழக்குப் பருவ மழை பெய்து ஓய்ந்திருந்த நிலையில் வியாழக்கிழமை நண்பகலில் இருந்து சென்னை முழுவதும் திடீரென பலத்த மழை பெய்து தண்ணீா் சாலைகளில் தேங்கியது. இதனால் நகரின் பிரதான சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றது.
இத்தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த முடியாததினால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளானாா்கள். சாலைகளில் சில இடங்களில் தண்ணீா் இடுப்பளவுக்கு தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊா்ந்து செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.
பலத்த மழையின் காரணமாக சென்னையில் மூவர் மரணம் அடைந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டு மக்களை சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன.
கனமழை காரணமாக தங்களின் அன்பானவர்களை இழந்தவர்களுக்கு மனமார்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்" என பதிவிட்டுள்ளார்.