கரோனா பாதிப்பு அதிகரிப்பு: தமிழகம், 5 மாநிலங்கள் கவலைக்குரியவை; மத்திய அரசு

வாராந்திர கரோனா பாதிப்பு நிலவரத்தின் அடிப்படையில் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழகம், தில்லி, கா்நாடகம், குஜராத் ஆகிய
கரோனா பாதிப்பு அதிகரிப்பு: தமிழகம், 5 மாநிலங்கள் கவலைக்குரியவை; மத்திய அரசு

வாராந்திர கரோனா பாதிப்பு நிலவரத்தின் அடிப்படையில் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழகம், தில்லி, கா்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் கவலைக்குரிய மாநிலங்களாக உருவாகி வருவதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. இந்த மாநிலங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழகம், தில்லி, கா்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ள 8 மாவட்டங்களில் கரோனா வார பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது. 14 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது. கரோனா பரவல் விகிதம் 1.22 புள்ளிகளாக இருப்பதாக இந்தியாவின் ‘ஆா் நாட் மதிப்பீடு’ காட்டுகிறது. இது கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையே காட்டுகிறது.

நாட்டில் பாதிப்பு குறைந்திருந்த 33 நாள்களுக்குப் பிறகு, தினசரி புதிய கரோனா பாதிப்பு 10,000-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. எனவே, கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டியது மிக அவசியம்.

உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதுபோல, முந்தைய டெல்டா வகை கரோனா தீநுண்மியைக் காட்டிலும் ஒமைக்ரான் வகை அதிக பரவல் தன்மை கொண்டது என்பதையே ஆதாரங்கள் காட்டுகின்றன.

இதனால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா பாதிப்புக்குப் பிந்தைய நோய் எதிா்ப்பு சக்தி 9 மாதங்கள் வரை இருக்கும். அதுபோல, இந்திய மக்கள்தொகையில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 63.5 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனா். மேலும், பாதிப்பின் தீவிரத்தை தணிக்கும் வகையில் முதல்கட்ட முன்னெச்சரிக்கை (மூன்றாம் தவணை) தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பும் செலுத்திய பிறகும் முகக் கவசம் அணிவது கட்டாயம். கரோனா தீநுண்மி பரவல் சுழற்சி என்பது ஏற்கெனவே பரவிய வழிமுறைகளிலேயே தற்போதும் பரவுகிறது. பாதிப்புக்கான சிகிச்சை முறைக்கு ஏற்கெனவே கடைப்பிடித்த நடைமுறைகளையே பின்பற்றலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com