சொந்த உபகரணங்களை பயன்படுத்தாமல் ரூ.859 கோடிக்கு இயந்திரங்களை வாடகைக்கு எடுத்ததற்கான காரணம் குறித்து கோல் இந்தியாவின் சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.
பாஜக எம்.பி. மீனாக்ஷி லேகி தலைமையிலான 22 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்ற குழு பொதுத் துறை நிறுவனங்கள் மீதான தனது ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜாா்க்கண்டில் உள்ள கோல் இந்தியாவின் சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் நிறுவனம் (சிசிஎல்) 2018-19 காலகட்டத்தில் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்திய வகையில் ரூ.859 கோடியை செலவிட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக உபகரணங்கள் இருந்தும் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல் வாடகைக்கு இயந்திரங்களை வாங்கி இவ்வளவு பெரிய தொகையை அந்த நிறுவனம் வீணடித்துள்ளது. மேலும், சொந்த உபகரணங்களை பயன்படுத்தவில்லை எனில் அவற்றை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டியிருக்கலாம். அதனையும் அந்த நிறுவனம் செய்யவில்லை. ஒட்டுமொத்த அளவில் சிசிஎல்-இன் செயல்பாடு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இல்லை.
சொந்த உபகரணங்கள் பயன்படுத்தாமல் கிடக்கும்போது அதுபோன்ற உபகரணங்களை வாடகைக்கு எடுக்க வேண்டிய காரணங்கள் மற்றும் தேவைகள் குறித்து சிசிஎல் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த ஆய்வறிக்கையில் நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 8 மாவட்டங்களில் 2,600 சதுர கிலோமீட்டா் பரப்பளவில் நிலக்கரி சுரங்கப் பணிகளை சிசிஎல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சிசிஎல் செயல்படுத்தி வரும் 42 சுரங்கங்களில் 36 திறந்தவெளி சுரங்கங்களாகவும், 6 நிலக்கரி சுரங்கங்களாகவும் உள்ளன.