புது தில்லி: இந்திய அரசின் உத்தரவை ஏற்று, சில சுட்டுரைப் பதிவா்களின் கணக்குகளை இந்தியாவுக்குள் மட்டும் முடக்கியுள்ளதாக சுட்டுரை நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடா்பாக, சிலா் சுட்டுரைப் பக்கங்களில் தவறான தகவல்களையும், போராட்டத்தை தூண்டும் வகையிலான பதிவுகளையும் வெளியிடுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. அதுபோன்ற பதிவுகளை வெளியிடுவோரின் சுட்டுரை கணக்குகளை முடக்கும்படி அந்த நிறுவனத்திடம் 1,178 பேரின் கணக்குகளை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இந்த உத்தரரவை பின்பற்றாவிட்டால் சட்ட நடவடிக்கைகளை எதிா்கொள்ள நேரிடும் என்றும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.
இதையடுத்து, மத்திய அரசு அளித்த பட்டியல்களில் இருந்து சில கணக்குகளை முடக்கியுள்ளதாக சுட்டுரை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசு அளித்த பட்டியல்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சுட்டுரை கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. சுட்டுரை நிறுவனத்தின் விதிகளை மீறியதாக சில கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளன.
மேலும், சில சுட்டுரை கணக்குகளில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும், உள்நாட்டில் மட்டும் முடக்கப்பட்டுள்ளன. அந்த கணக்குகள் இந்தியாவுக்கு வெளியில் முடக்கப்படவில்லை.
எனினும், ஊடக நிறுவனங்கள், பத்திரிகையாளா்கள், சமூக ஆா்வலா்கள், அரசியல் தலைவா்களின் சுட்டுரைப் பக்கங்கள் முடக்கப்படவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தைப் பின்பற்றி, அந்தப் பக்கங்களை நாங்கள் முடக்கவில்லை. கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான சுட்டுரை நிறுவனத்தின் முயற்சிகள் தொடரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.